Monday, July 22, 2013

எரியாத மின் கம்பத்திற்கு மலர் வளையம் வைக்கும் போராட்டம்

புதுச்சேரி,ஜுலை-21
எரியாத மின் கம்பத்திற்கு மலர் வளையம் வைக்கும் நூதன போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியாள்பேட்டை சோலைநகர் சுனாமி குடியிருப்பு பகுதியில், நீண்டகாலமாக எரியாத மின் விளக்கு கம்பத்திற்கு மலர் வளையம் வைக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.அதேப்போல் குடியிருப்பு பகுதியில் உள்ள மீனவ மக்கள் செல்வதற்கு சாலைவசதி அமைத்து தரப்பட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

முத்தியாள்பேட்டை அங்களாம்மன் கோவில் எதிரில் இருந்து  சென்ற ஊர்வலத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரகமிட்டி செயலாளர் அழகப்பன் தலைமை தாங்கினார்.வாலிபர் சங்க பிரதேச தலைவர் ஆர்.சரவணன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.சங்க நிர்வாகிகள் பிரதாப்,நாகமுத்து,அன்துவான்,யோகராஜ்,பாஸ்கர் உள்ளிட்ட வாலிபர்கள், அப்பகுதி குடியிருப்போர் திரளாக இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக மேல தாளம் முழங்க மலர் வளையத்தோடு சென்ற வாலிபர் சங்கத்தினர் குடியிருப்பு பகுதியில் எரியாத மின்கம்பங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு மின்சாரத்துறையை எதிர்த்து முழக்கமிட்டனர்.இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.